நான் இந்த தேசத்தின் உண்மையுள்ள குடிமகன். ஆனாலும் என் சுயதேசம் இதுவல்ல. நான் மேலான தேசத்தை நோக்கிய பயணத்திலிருக்கிறேன். சுதந்திரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் பிரதான பணியாகும். இங்கு நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. இங்கு நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் வெற்று மனநிலையில் பார்த்து கடந்துபோகிறேன். இந்த சமுதாயத்தின் ஏதோவொரு சலுகையையோ புகழ்ச்சியையோ பெறுவதற்காக நான் இந்த சமுதாயத்தின் நிகழ்வுகளோடு இசைந்து செல்லுவேனானால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்ல. அவசியமில்லாத ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனற்ற பக்திவிருத்தியை உண்டாக்காத ஒன்றிலும் நான் ஈடுபடமாட்டேன். அற்ப ஆதாயத்தையும் நாடமாட்டேன். வருடமுழுவதும் என்னிஷ்டப்படி தேசபக்தியில்லாமல் வாழ்ந்துவிட்டு வருடத்துக்கொரு முறை தேசத்தைக் கொண்டாடும் மாய்மாலக்காரர்களில் ஒருவனாக எனக்கு விருப்பமில்லை. எனது தேசத்தின் சுதந்திரம் என்பதே கேள்விக்குறியாக இருக்க இன்னும் ஆன்மீக சுதந்தரமோ பொருளாதார சுதந்தரமோ பெறும் வழிவகையறியாத எண்ணற்ற அப்பாவி மக்களும் சீரழிக்கப்பட்ட அபலைப் பெண்களும் கூடியிருக்க நான் ஜெய் ஹிந்த் என்று சொல்லுவதோவந்தே மாதரம் என்று சொல்லுவதோ இந்த தேசத்தையே பரியாசம் பண்ணுவது போலிருக்கும் மேலும் இதனால் என் கடவுளும் என்னில் மகிழவில்லை. அவரை சந்தோஷப்படுத்தாத ஒன்றிலும் அல்லது அவர் பிரசன்னமளிக்காத எதிலும் நான் பங்கேற்கமாட்டேன். என் தேசம் எனக்கென்று தனியுரிமைகளைக் கொடுத்திருக்கும்போது நான் ஏன் வலியச் சென்று சிறைபடவேண்டும் ? இதுபோன்ற கேலிக்கூத்துக்களால் என் தேசத்தையும் நான் அவமானப்படுத்தி என் தேவனையும் நான் கோபப்படுத்துகிறேன்.